மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற
புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என
புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு
அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம்
நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர்,
பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக்
குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால்
புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது.
இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை,
கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி
புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை
ஏற்படும்.
மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும்.
அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில்
தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில்
பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி
நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம
ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா.
ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின்
ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி
இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம்
எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன்
உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும்
காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக்
காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில்.
மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த
குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.
மாசி மாத பூச நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றுதான் முருகப்
பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம்
செய்தருளினார். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது அன்றைய தினம்
தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவதுடன், பிரம்மஹத்தி போன்ற பெரும்
பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி
மாதத்தில் தான். காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும்
விசேஷ விரதங்கள். அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள்
பெற்றதும் எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம் நிகழ்ந்ததும் மாசிமாதத்தில்
தான்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். பன்னிரு
ஆழ்வார்களும் ஒருவரான குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர
நாளில்தான் அவதரித்தார்.
மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம்
இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர் என்று புராணங்கள்
கூறுகின்றன. மாசி மகத்தன்றுதான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை
மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். மாசி மகத்தன்றுதான் காமதகன விழா
நடைபெறுகிறது. மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக்
கருதப்படுகிறது. உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய
விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
பிற சிறப்புகள் :
மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம் மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம் அத்துடன் மாசிப் பூணூல் மணிப்பூணூல் என்பர். அதனால் இம்மாதத்தில் உபநயனம் செய்வது சிறப்பானது. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும்; மாசிக் கயிறு பாசிபடியும் என்பதும் பழமொழி இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. காரடையான் நோன்பும் கடைப்பிடித்து நோன்புக்கயிறு கட்டிக் கொள்வர். இம்மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
No comments:
Post a Comment